DMK

“கையைப் பற்றிக்கொண்டு கழகப் பாடல் பாடினார்” - மறைந்த கே.பி.பி.சாமி குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்!

சென்னை திருவொற்றியூரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமியின் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கே.பி.பி.சாமி குறித்து உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி செயலாளர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் கே.பி.பிசாமி மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலிவுற்றிருந்த நிலையில் பலமுறை நாங்கள் அவரை வந்து சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

அப்படி வரும்போதெல்லாம் தன்னுடைய உடல்நலத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கழகத்தைப் பற்றி நாட்டு நடப்புகளைப் பற்றி தொகுதியைப் பற்றி கட்சி வளர்ச்சியைப் பற்றி பேசுவார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, கையைப் பற்றிக்கொண்டு தன்னையே மறந்து இயக்கப் பாடலைப் பாடி எங்களை எல்லாம் அவர் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

உடல் நலம் பெற்றுத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இன்று காலையிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம்.

இரண்டு முறை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான வகையில் பணியாற்றிவர். என்றும் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை உடனடியாக தலைவர் கலைஞரிடமும், என்னிடமும் சுட்டிக்காட்டி தீர்வு காண்பார்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் மீனவர் சமுதாயத்திற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கே.பி.பி.சாமி. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மீனவ சமுதாயத்தை சார்ந்த சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

Also Read: “மீனவர் சமுதாயத்திற்காக இரவு பகலாகப் பணியாற்றிய செயல்வீரர் கே.பி.பி.சாமி” - தி.மு.க தலைவர் இரங்கல்!