DMK

மதுரையில் தி.மு.க பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை : நீதிமன்றத்தை நாட முடிவு!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க ஏற்பாடு செய்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெறுவோம் என மதுரை மாநகர தி.மு.க பொறுப்பாளர் கோ.தளபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் டிசம்பர் 31ம் தேதியன்று பேரணி நடத்த தி.மு.கவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மதுரை நகர் பொறுப்பாளர் கோ.தளபதி உட்பட நிர்வாகிகள் காவல்துறையின் அனுமதியைப் பெறுவதற்காக காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, அனுமதிக்கான கடிதம் ஒன்றை அளித்தனர். ஆனால், தி.மு.க பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பின்னர், தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கூறியதாவது :

“குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து யானைக்கல் அருகிலுள்ள ஓபுளாப்படித்துறை வரை டிசமப்ர் 31 அன்று பேரணி நடத்த உள்ளோம்.

இதற்கு முறையாக காவல்துறையின் அனுமதியை பெற காவல் ஆணையரை அணுகினோம். போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி அனுமதி வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டார். எங்களுக்கு மட்டுமே இது போன்ற காரணங்களைக் கூறி, அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆளுங்கட்சியினர் நடத்தும் ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று கூட, எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.கவினர் போக்குவரத்துக்கு இடையூறாக ஊர்வலம் சென்றனர். அவர்களை போலிஸார் கண்டு கொள்வதில்லை.

காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், நீதிமன்றம் மூலம் பேரணிக்கு உரிய அனுமதியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தனர்.

Also Read: "CAA-வை வாபஸ் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்" : தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் #DMKRally