இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தில் பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னையில் தி.மு.க சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரையில் தி.மு.கவின் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. பேரணியின் இறுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதன் பிறகு மக்கள் முன்னிலையில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆளுங்கட்சியின் சதியை முறியடித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் மாபெரும் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி. இது பேரணி அல்ல; போர் அணி.
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய பா.ஜ.க அரசு வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில் இந்த சட்டத்தை திரும்பப் பெறுகிற வரையில் கூட்டணி மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருடன் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.” எனத் தெரிவித்தார்.