DMK

''பரிதாபகரமான நிலையில் சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ...'' - மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி !

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. நாடளுமன்ற குழுத் தலைவரும், திருபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று மக்களவையில் செம்மொழி தமிழாய்வு விருதை மீண்டும் வழங்குவது குறித்து வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்க்கு தமிழுக்கு செம்மொழி தகுதி அளித்ததற்காக நன்றிகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் செம்மொழி தமிழாய்வு விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

2010ம் ஆண்டில் பின்லாந்தை சேர்ந்த பேராசிரியர் ஆஸ்கர் பார்பொலா அவர்களின் உயரிய தமிழ் பணிக்காக, செம்மொழி தமிழாய்வு விருதையும், சான்றிதழையும் வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.

செம்மொழிக்காக பாடுபட்டவர்களுக்காக, இதுவரையில் ஒன்பது தமிழ் ஆர்வலர்களுக்கு செம்மொழி தமிழாய்வு விருது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

சென்னயிலுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்காக 143 பதவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் இயக்குநர், பதிவாளர், நிதி ஆலோசகர் போன்ற எந்தவொரு பதவியையும் நிரப்பாமல் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் பரிதாபமான நிலையில் உள்ளது. ஆனால் வழங்கப்படவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமது வெளிநாட்டு பயணங்களின் போது திருவள்ளுவரின் திருக்குறள், கணியன் பூங்குன்றனாரின் புறநாநூறு ஆகியவற்றிலிருந்து கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் அவர்களை பாராட்டி பேசியுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் போக்கு சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பொறுத்தவரை வேறுவிதமாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அவரது கட்சியினர் திருவள்ளுவர் சிலைகளை காவிமயமாக்கும் முயற்சியில் உள்ளனர்.

செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட 143 பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கலைஞர் பெயரிலான செம்மொழி தமிழாய்வு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் செம்மொழி தமிழுக்கு பாடுப்பட்ட உலகத் தமிழர்களுக்கு வழங்கிட ஆவண செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.