DMK

"2021ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டம் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்" - உதயநிதி ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ''தி.மு.க வேட்பாளர் புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இராதாமணி தொகுதி மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டார். அவர் மறைந்ததால் தான் இந்த தேர்தல் வந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரை வெற்றிபெற செய்தீர்கள். அதுபோல இந்த இடைத்தேர்தலிலும் தி.மு.க.வை நீங்கள் வெற்றிப்பெற செய்ய வேண்டும். மோடி தமிழகம் வரவே அஞ்சுகிரார் வந்தாலும் வேட்டி சட்டை அணிந்துதான் வருகிறார்.

எடப்பாடி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வரானவர். ஆனால், நம் தலைவர் படிப்படியாக பல பொறுப்புகளை வகித்து இன்று தி.மு.க தலைவராக நம் தலைவர் இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இன்னும் மர்மம் தொடர்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம் தலைவர் கூறியுள்ளார்.

அடுத்து வரவுள்ள சட்டபேரவை பொது தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் தான் இந்த இடைத்தேர்தல். அடுத்து வரவுள்ள சட்டபேரவை தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று நம் தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்'' எனத் தெரிவித்தார்.