DMK

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை!

தியாகி இமானுவேல் சேகரனின் 62வது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தி.மு.க எம்.பி., கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், சுப.தங்கவேலன், தமிழரசி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் இமானுவேல் சேகரனார். அவரது 62வது நினைவு தினத்தில் எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர் 1950ம் ஆண்டு விடுதலை இயக்கத்தைக் கண்டவர். 1954ல் தீண்டாமை மாநாட்டை நடத்தி தீண்டாமையை ஒழிக்கப் போரிட்டவர்” எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, “உள்ளூர் நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு இஸ்ரேல் செல்வதா? கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது கவலையளிக்கிறது.

நீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது. ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.