DMK

‘கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன்’ இது மூன்றையும் மந்திரமாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது : ஆ.ராசா 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. அந்த விவாத்தின் போது, தி.மு.க எம்.பி ஆ.ராசா, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதையும், அதனால் கலெக்‌ஷன்- கமிஷன்- கரப்ஷன் என ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்து வருகிறார்கள் என்று பேசியுள்ளார்.

விவாதத்தின் போது அவர் பேசுகையில், “ அரசியலமைப்பின் 73வது விதி, பஞ்சாயத்து அமைப்புகள் ஒரு குட்டி குடியரசு என்று சுட்டிக் காட்டுகிறது. மக்களுக்கான பணிகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவே உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், வெளிப்படைத்தன்மையை மூடி மறைக்கவே சில மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது” என்று மக்களைவையில் தமிழக அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதன் மூலம் லாபம் சம்பாதிக்க நினைக்கும் அ.தி.மு.கவின் ஆட்சியாளர்களைக் கண்டித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல போராட்டங்களையும், கண்டனக் குரல்களையும் எழுப்பி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கிறதென்பதை, டெண்டர் ஊழல்களை பட்டியலிட்டு அம்பலப்படுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் . அதன் ஒரு பகுதியாகத்தான் தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

2016-ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அது, இது என சாக்குப்போக்கு கூறி தாமதப்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பாக சுயமாக இயங்க வேண்டும். ஆனால், தமிழக தேர்தல் ஆணையம் மாநில அரசின் கைப்பாவையாக இயங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என மீண்டும் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு வழங்கும் 60 கோடி ரூபாய் உள்ளாட்சி நிதியும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. “ நிதியை நிறுத்தும் மத்திய அரசு, உண்மையாகவே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்பினால், உள்ளாட்சி தேர்தல் கட்டாயம் என்ற சட்டத்தை நிறைவேற்றுங்கள் ” என தி.மு.க எம்.பி ஆ.ராசா வலியுறுத்தி பேசினார். இதற்கு மற்ற மாநில எம்.பி.,க்கள் ஆதரவுக் குரல் எழுப்பினர்.