DMK

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை கைகழுவும் அ.தி.மு.க : இதுதான் அவர்களின் நன்றி உணர்ச்சி- துரைமுருகன் அதிரடி

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன், போக்குவரத்துத் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றுந்து (மினிபஸ்) சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினால் தான் மினி பஸ் சேவை துவங்கப்பட்டது. போக்குவரத்து துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது எனக் கூறினார். அதற்காக லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும்” என கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் உள்ள மினி பஸ் சேவை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மினிபஸ் திட்டம் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஆனால், அதையே தற்போதைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ரத்து செய்யப் பார்ப்பது அவர்கள் எந்த அளவிற்கு தங்களின் தலைமைக்கு நன்றி உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.