DMK

கலைஞருக்கு மெரினாவில் இடத்தை உறுதி செய்த வில்சன் மாநிலங்களவைக்குச் செல்கிறார்!

தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 3 இடங்கள் தி.மு.க சார்பாக நிரப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம் மாநிலங்களவையில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர இருக்கிறது.

2019 ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் வில்சன் தி.மு.க சார்பில் பல வழக்குகளில் ஆஜராகி வெற்றியைத் தேடித் தந்தவர். குறிப்பாக, கலைஞர் மறைவுக்குப் பிறகு மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு அருகே கலைஞருக்கு நினைவிடம் அமைக்கக்கோரிய வழக்கில் ஆஜராகி கலைஞர் நினைவிடத்தை அண்ணாவுக்கு அருகில் உறுதி செய்தவர்.

மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, ம,தி,மு.க-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.