Cinema

ஞானவேல் ராஜா வீட்டில் நகை திருட்டு விவகாரம் : பணிப்பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு - நடந்தது என்ன?

தமிழில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல் ராஜா. இவரது தயாரிப்பில் அடுத்ததாக சூர்யாவின் 'கங்குவா', விக்ரமின் 'தங்கலான்' உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் இவர் அண்மையில் பிரபல இயக்குநர் அமீரின் 'பருத்திவீரன்' பட சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக இவரது பெயர் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், தற்போது இவர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேகா, சென்னை தி.நகரில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த மாதம் நேகாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு வந்திருந்த பரிசுப்பொருட்கள் சிலவை காணாமல் போயுள்ளது. மேலும் சில தங்க நகைகளும் காணாமல் போயுள்ளது. இதையடுத்து இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஞானவேல் ராஜாவின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் லட்சுமி என்பவரிடமும் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தனக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறி வந்ததோடு, புகார் கொடுத்த சில நாட்களுக்கு பிறகு அவர் பணிக்கு வருவதையும் நிறுத்தியுள்ளார்.

இதனால் இதுகுறித்தும் ஞானவேல் ராஜா போலீசில் புகார் கொடுத்ததகையடுத்து பணிப்பெண் லட்சுமி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். தொடர்ந்து இன்றும் விசாரணைக்கு வருமாறு லட்சுமியிடம் போலீசார் கூறிய நிலையில், மன உளைச்சல் ஏற்பட்டு, அரளிவிதையை அரைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது பணிப்பெண் லட்சுமிக்கு இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அமீர் சர்ச்சையில் சிக்கிய ஞானவேல் ராஜா, தற்போது இந்த விவகாரத்திலும் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் காணாமல் போன வழக்கில், அதே வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பல கோடி மதிப்பிலான வீடு வாங்கி அதனை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: “இனி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்...” - பிரபல நடிகரின் திடீர் அறிவிப்புக்கான காரணம் என்ன?