Cinema

“இனி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்...” - பிரபல நடிகரின் திடீர் அறிவிப்புக்கான காரணம் என்ன?

மராத்தி திரைப்படங்களில் பிரபல நடிகராக அறியப்படுபவர் சின்மே மண்ட்லேகர் (Chinmay Mandlekar). ஹிந்தி மராத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், கடந்த 2022-ம் வெளியான சர்ச்சை படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் நடித்திருந்தார். எல்லாவற்றிக்கும் மேலாக சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு தழுவிய படத்தில் இவர் சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'சிவராஜ் அஷ்டேக்' திரைப்படத் தொடரானது மொத்தம் 8 பாகங்கள் வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 6 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த 6 பாகங்களிலும் சத்ரபதி சிவாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் நடிகர் சின்மே மண்ட்லேகர் நடித்திருந்தார். இந்த பாகங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் இனி தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது இவர்களது மகனுக்கு ஜஹாங்கீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பல ட்ரோல்களுக்கு உள்ளாவதாகவும், எனவே இனி வருங்காலத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தான் நடிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சின்மே மண்ட்லேகர், கடந்த 2011-ம் ஆண்டு ஜோஷி என்பவரை திருமணம் செய்து 2013-ல் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்த சிறுவனுக்கு 11 வயதாகும் நிலையில், அவரது 'ஜஹாங்கிர்' என்ற பெயரை வைத்து ஒரு சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். அதாவது, முகலாய பேரரசர்களுடன் சிவாஜி அதிகளவு சண்டையிட்டுருக்கிறார். ஆனால் முகலாய பேரரசர்களில் ஒருவரான பாபர் வம்சாவளியை சேர்ந்த ஜஹாங்கீரின் பெயரை வைக்கப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து இதுகுறித்து சின்மே மண்ட்லேகரின் மனைவி ஜோஷி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அதில், தனது மகன் பெர்சிய புத்தாண்டு அன்று பிறந்ததாகவும், அதனாலே பெர்சிய பெயரான ஜஹாங்கிர் வைத்ததாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இதுகுறித்து பல ட்ரோல்கள் செய்யப்பட்டது.

இதனால் மிகுந்த மன வேதனை கொண்ட நடிகர் சின்மே மண்ட்லேகர், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார். மேலும் தான் இனி சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் தற்போது அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிகழ்வு தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: மீண்டும் பூதாகரமாகும் ‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம் : தேவாலயங்களில் ‘மணிப்பூர் ஸ்டோரி’யை திரையிட முடிவு !