Cinema

ரூ.38 கோடி பரிசுத்தொகை: Squid Game ரியாலிட்டி ஷோ மீது போட்டியாளர்கள் ஆத்திரம்... வழக்கு தொடர முடிவு !

தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த 'Squid Game' வெப் சீரிஸ் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையையும் 'Squid Game' படைத்தது.

'Squid Game' வெப் சீரிஸுக்கு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் ஹிட்டான தொடராக இது உள்ளது. ஒன்பது பாகங்களைக் கொண்ட இந்த தொடர் வெளியான ஒரே மாதத்தில் 111 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை படைத்தது.

இதன் முதல் பாகம் பெரிய ஹிட் கொடுத்த நிலையில், அடுத்த பாகம் வெளியாகும் என்று திரைப்படக்குழு அப்போதே தெரிவித்திருந்தது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருக்கும் நிலையில், தற்போது 'Squid Game: The Challenge' என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை Netflix உருவாக்கியுள்ளது. இந்த ஷோவில் சுமார் 456 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போட்டியில் இறுதியில் வெற்றிபெறுபவர்களுக்கு இதுவரை எந்தவொரு ஷோவில் வழங்கப்படாத பரிசுத்தொகையான 4.56 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37 கோடியே 99 லட்சம்) கிடைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியான இந்த போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலபேருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பல்வேறு சிக்கல்கள் நிகழ்ந்துள்ளதாக தற்போது பெரும் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதாவது, படத்தில் வருவதுபோல், 'ரெட் லைட் கிரீன் லைட்' என்ற டாஸ்க் இந்த போட்டியில் உள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி, இங்கிலாந்தில் உள்ள ஸ்டுடியோஸ் ஒன்றில் இந்த போட்டி நடைபெற்று வரும் நிலையில், அங்கே இருக்கும் குளிருக்கு ஏற்றார் போல் போட்டியாளர்களுக்கு ஆடைகள் வழங்கவில்லை என்றும், இதனால் போட்டி ஏற்பாடு செய்த Netflix நிறுவனம் மீது வழக்கு தொடர்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியின்போது, உணவு கூட வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த போட்டி முடிந்து வெளியேறியுள்ள போட்டியாளார்கள்தான் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். எனினும் இதுபோன்ற ரியாலிட்டு ஷோவில், போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றாலும், அதில் இருக்கும் கடும் இன்னல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கேரள பல்கலையில் இசைக் கச்சேரி... கூட்ட நெரிசலில் சிக்கி 50 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் !