Cinema

சனாதனம், உபி சாமியார் பேச்சு, பாரதம் சர்ச்சை.. இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து என்ன ? - முழு விவரம் !

சென்னையில் தமிழ் ஸ்டூடியோ சார்பில் பியூர் சினிமா புத்தக அங்காடி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று புத்தக அங்காடியைத் தொடங்கி வைத்து சிறப்பித்தார். இதையடுத்து அங்கு பார்வையிட்ட வெற்றிமாறன், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து தவறு ஒன்றும் இல்லை என்று கூறி ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், "சமத்துவம் என்பது நம் அனைவரின் பிறப்புரிமை. பிறக்கும் எல்லோருக்கும், எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. அதனை மறுக்கும் விதமாக எந் ரூபத்தில் வந்தாலும், எதுவாக இருந்தாலும் அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய விடுதலையை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய கடமை ஆகும்.

அதைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருக்கு ஆதராவாக இருக்கிறேன். இந்த விஷயத்தை நான் இங்கு கூறுவதற்கு காரணம் என்ன என்றால் நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்களிலிருந்து, அதற்கான விடுதலை என்பது வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து இந்தியா - பாரதம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், "இந்தியா என்கிற பெயரை போதுமானதாக உள்ளது. அதுவே சரியானதாகவும் இருக்கிறது" என்றார். தொடர்ந்து உதயநிதிக்கு ரூ.10 கோடி என்று கொலை மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச சாமியார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றி மாறன், "இது போன்ற செயல்தான் வன்முறையை தூண்டுகிறது" என்றார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை தமுஎகச சார்பில் சென்னையில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது என்றும், அதனை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல் அதனை திரித்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

இதற்கு பாஜக கும்பல் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்தும் சனாதனத்துக்கு எதிராக குரல் கொடுத்த அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எந்த கொம்பனாலும், உதயநிதியின் சுண்டு விரலைக் கூட தொட முடியாது”: அயோத்தி சாமியாருக்கு வேல்முருகன் கண்டனம்