Cinema

Aneethi : “இவர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும்..” - மனம் திறந்த நடிகர் அர்ஜுன் தாஸ் !

தமிழில் பிரபல இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம்தான் 'அநீதி'. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் உள்ள பிராட்வே திரையரங்கில் இந்த படத்தை காண நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் துசாரா வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன் தாஸ், "அநீதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசந்தபாலன் இயக்கம், சங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நான் எதிர்பார்த்தேன். இந்த படத்துக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறேன். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் எதுவும் நடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் நான் ஆக்டிவாக இல்லை. பணம் கொடுத்து படம் பார்கிறர்வர்கள், கருத்து தெரிவிக்கலாம். ஆனால் தனி மனித தாக்குதல் எதுவும் இல்லாமல் கருத்து கூறினால் நல்லது. காமெடியை முயற்சிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் நான் இன்னும் அதனை முயற்சி கூட செய்யவில்லை.

வெற்றிமாறன், செல்வராகவன் போன்ற பெரிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க ஆசைபடுகிறேன்" என்றார். மீண்டும் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்" என்றார்.

Also Read: “வந்த இடம் என் காடு..” : ஜெயிலில் குத்தாட்டம்.. வெளியானது அனிருத் குரலில் SRK படத்தின் முதல் பாடல் !