Cinema
4 ஆண்டுகளுக்கு பிறகு 3 சர்வதேச விருதுகள்.. உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு குவியும் வாழ்த்து !
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் ‘கண்ணே கலைமானே’. கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் இயற்கை விவசாயம் செய்யும் உதயநிதியும், வங்கி மேலாளரான தமன்னாவும் காதலித்து இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் செய்த பிறகு இருவரது வாழ்க்கையிலும் ஒரு பிரச்னை வருகிறது. அதிலிருந்து மீள இருவரும் என்ன செய்கின்றனர், குடும்பம் உதவுமா என்பதே மைய கதை.
இது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் 3 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் போட்டியிட்டது. இதில் சிறந்த தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகையாக தமன்னாவும், சிறந்த துணை நடிகையாக வடிவுக்கரசியும் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் வெளியான போதே, ஏற்கனவே இந்த திரைப்படம் தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவில் விருது வென்றதோடு, கொல்கத்தா கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது. இந்த சூழலில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்துக்கு 3 விருது கிடைத்துள்ளது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்களின் சினிமாத்துறை விடைபெறுதலுக்கு எப்படி வாழ்த்து தெரிவிப்பது எனத் தெரியவில்லை. நீர்ப்பறவை, கண்ணேகலைமானே என்று இன்றும் நாட்டுக்குள் இருக்கும் வீட்டுமக்களாலும், புதிய தலைமுறை இளைஞர்களாலும் கவனிக்கப்படும் திரைப்படங்களை இயக்க வாய்ப்புகள் தந்து, என் இனிய நினைவுகளுக்கு அன்பும் தந்த தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.." என்று குறிப்பிட்டு உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!