Cinema

லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிய கால்.. ஊட்டியில் பிரபல நடிகருக்கு நேர்ந்த துயர சம்பவம்!

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகன் சூரஜ் குமார். இவர் அனூப் ஆண்டனி இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக இருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இவர் 'ரத்தம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா உலகில் அறிமுகமாக இருந்தார். மேலும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூரஜ் ஊட்டியிலிருந்து மைசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரியின் மீது இவரது வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் அவரது வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி முறிந்துள்ளது. இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் அவரது வலதுகால் முற்றிலும் நசுங்கியுள்ளதால் அந்த காலை அகற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சக நடிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சாலை விபத்தில் பிரபல நடிகரின் கால் துண்டிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மும்பை - டெல்லி பறக்கும் விமானத்தில் சிறுநீர், மலம் கழித்த நபர்.. அதிரடி ந்டவடிக்கை எடுத்த அதிகாரிகள் !