Cinema

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்.. ரசிகர்களுக்கு AK எழுதிய உருக்கமான அறிக்கை : முதலமைச்சர் இரங்கல்!

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் சில தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் அதனை வசூல் ரீதியாக வெற்றியடைய செய்து விடுவர். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பைக் ரேஸிலும் கில்லாடி. இதனாலே அவர் அடிக்கடி பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வார். இப்படி பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு பயணம் செய்து புதுவித அனுபவத்தை தேடிக்கொள்வார்.

இவரது நடிப்பில் கடந்த மாதம் 'துணிவு' படம் வெளியானது. வழக்கம்போல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. துணிவு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. இதையடுத்து அவர் தனது அடுத்த படமான AK 62 படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இன்னும் இயக்குநர் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே அஜித் குமாரின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர் வீட்டில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்தார். வீட்டில் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் அஜித் குமார் மற்றும் சகோதர்கள் அனுப் குமார், அனில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள பத்திரிக்கையாளர் செய்தி குறிப்பில், “எங்களது தந்தையார் பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முரசொலியே தன்வீடு என அர்ப்பணித்து கொண்டவர்” : முன்னாள் மேலாளர் மறைவுக்கு முதல்வர் உருக்கத்துடன் இரங்கல்!