Cinema

“எனக்கு இவரோட பயோ பிக் படத்தில் நடிக்க ஆசை.. ஏன்னா..!” - காரணத்தை கூறி விருப்பம் தெரிவித்த ராம் சரண் !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் ராம்சரண். தெலுங்கில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர், 2007-ல் வெளியான சிறுதா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன்மூலம் தொடங்கிய தனது திரைப்பயணம் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இவரது இரண்டாவது படமே தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியானது. 'மகதீரா' என்ற பெயர் கொண்ட அந்த படம் ராம் சரணுக்கு மட்டுமின்றி, காஜலுக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது. இந்த படம் தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மூலம், ராம்சரனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் கூடத்தொடங்கியது.

அதன்பிறகு சில ஹிட் படங்கள் கொடுத்தாலும் இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மேலும் கவர்ந்து வந்தார். இவருக்கு மிகப்பெரிய பெயர் கொடுத்த மகதீரா கூட்டணி மீண்டும் இணைந்தது. கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் RRR படமும் ஒன்று. தென்னிந்திய திரை நடிகர்களில் நீங்கா இடம் பிடித்திருந்த ராம் சரண், இந்த படத்தின் மூலம் இந்திய திரை பரிபலங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

அதோடு உலக அளவு அனைவருக்கும் தெரியும் முகமாக இவர் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் அண்மையில் வென்றது. உலகம் அறியும் ஒருவராக திகழும் இவரை ஆஸ்கர் வெற்றிக்கு பிறகும் வெளிநாட்டு ஊடகம் பேட்டி எடுத்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் 'India Today Conclave 2023' என்ற நிகழ்ச்சியில் ராம் சரண் கலந்துக்கொண்டார். அப்போது RRR படத்தின் மாபெரும் வெற்றி குறித்து பேட்டி அளித்தார். தொடர்ந்து அவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், "நான் இதுபோன்ற படங்களை விட, ஸ்போர்ட்ஸ் சார்ந்த படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்" என்றார்.

இதற்கு நெறியாளர் அப்படியென்றால் விராட் கோலி பயோ பிக் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு யோசிக்காமல் பதிலளித்த அவர், "நிச்சயம் நடிப்பேன். அவர் ஒரு உத்வேகமான ஆளுமை கொண்ட விளையாட்டு வீரர். விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நான் விராட் கோலியைப் போன்றே தோற்றம் கொண்டுள்ளதால் அந்த கதாபாத்திரம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

இதே போல் கிரிக்கெட் வீரர் தோனி பயோ பிக்கில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும், பிரவீன் தாம்பே பயோ பிக்கில் ஷ்ரேயாஸ் தல்பாடேவும், மொஹம்மத் அசாருதீன் பயோ பிக்கில் இம்ரான் ஹஷ்மியும், பெண் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பயோ பிக்கில் தாப்ஸியும் நடித்துள்ளனர். அதோடு 1983-ல் இந்திய அணி முதல் உலகக்கோப்பை வென்ற கதையையும் வைத்து 83 என்ற படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.