Cinema

வீங்கிய முகம்.. ரத்த கோரங்களுடன் உடல்: காதலன் தாக்கியதாக இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்ட தமிழ் பட நடிகை !

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்தவர் அனிகா விஜயி விக்ரமன். படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஆர்வம் வந்ததால், மாடலிங் செய்து வந்தார். தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கே' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து எங்க பாட்டன் பார்த்தியா, விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங், விளம்பர படங்கள் உள்ளிட்டவைகளில் நடித்து வருகிறார். அதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.

இந்த நிலையில், தான் தனது முன்னாள் காதலனால் தாக்கப்பட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்தேன். ஆனால் அவர் என்னை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்தார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் நான் அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்தேன். ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து என்னை சிக்கவைத்தார். மேலும் காவல்துறையினர் தன்னுடன் இருப்பதாக நினைத்து தொடர்ந்து என்னை துன்புறுத்தி கொண்டிருந்தார்.

இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு விலக தயாராக இல்லை.

நான் படப்பிடிற்கே சென்றுவிடக்கூடாது என்று விரும்பிய அவர், அதற்காக என் மொபைலை உடைத்தார். அதேநேரம் என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார். மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில், உச்சகட்டமாக என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

மறுபடியும் நான் போலீசில் புகார் அளித்தேன். இதனால அனூப் தலைமறைவாகி தற்போது நியூயார்க்கில் இருக்கிறார். அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன்" என்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் கடைசியாக 8 வாரங்களுக்கு முன்னர் தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தனது காதலன் தன்னை தாக்கியதாக அவர் வெளியிட்ட பதிவில், இனி இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது முன்னாள் காதலன் தன்னை தாக்கியதாக முகம், உடல் முழுவதும் காயங்களுடன் புகைப்படம் வெளியிட்ட அனிகா விக்ரமுனுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read: சினிமாவில் அனைத்தையும் இழந்த பிரபல தயாரிப்பாளர்..இறுதியில் மருந்துக்கு கூட பணமில்லாத நிலையில் சூர்யா உதவி