Cinema

“Interest இல்ல.. இனி அந்த கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க” : கோபத்துடன் பதில் அளித்த நடிகை ஓவியா !

2010ம் ஆண்டு நகைச்சுவை கலந்த காதல் படமாக வெளியானது ‘களவாணி’. சற்குணம் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், அதன் பிறகு மூடர் கூடம், யாமிருக்க பயமே, மதயானை கூட்டம் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். மலையாள நடிகையான இவருக்கு தமிழில் அநேக வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது என்றால் அது பிக் பாஸ்தான்.

பிக் பாஸின் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவு கொள்ளைகொண்டார். இவருக்காக தனியாக 'ஓவியா ஆர்மி' என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் தொடங்கி தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். அதிலிருந்து வெளியே வந்த இவருக்கு, மேலும் பட வாய்ப்புகள் குவிந்தது. அதன்படி 90ML என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தின் வாயிலாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். இருப்பினும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் அடுத்து 'பூமர் அங்கிள்' என்ற படம் வெளியாகவுள்ளது. இதனிடையே இவருக்கு 31 வயதாகும் நிலையில், இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருவர்.

அந்த வகையில் அண்மையில் கூட ரசிகர் ஒருவர் இவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஓவியா, "எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. திருமணம் குறித்து இனிவரும் காலங்களில் யாரும் என்னிடம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது போன்ற கேள்விகள் எரிச்சலூட்டுகிறது." என்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது பொது விவகாரங்களில் கருத்துகளை தெரிவித்து வருவார். மேலும் சில நேரங்களில் அரசியல் குறித்தும் 'கொளுத்தி போடுவோம்' என்ற நோக்கில் பதிவிடுவார். அதோடு திருமணம் குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும், தனக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையில்லை என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மதுரையில் துணை நடிகையுடன் சண்டையிட்ட Boy Bestie: ரோட்டில் வைத்து எச்சரித்து அனுப்பிய போலிஸ்-நடந்தது என்ன?