Cinema
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..” - மக்கள் வெள்ளத்தில் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம்!
தமிழில் சினிமாவில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு 'தாவனிக் கனவுகள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், நடிப்பில் மட்டுமல்லாமல் பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்டார். விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இவர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் அரசியிலிலும் ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். இதனாலே 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் தனது பகுதி மக்களுக்காக உதவிகளையும், சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக நடிகர் மயில்சாமி உயிரிழந்தார். இவரது இறப்பு திரைத்துறையை மட்டுமல்லாது பொதுமக்களையும் பாதித்துள்ளது.
இவரது இறுதி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உட்பல பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று வடபழனி மின்மயாணத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர்கள் இறந்துவிட்டால் அவரது இறுதி நிகழ்வில் திரைத்துறையினர் உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே வருவார்கள். ஒரு சில நடிகர்களின் மறைவுக்குதான் பொதுமக்கள் அதிகளவில் அஞ்சலி செலுத்துவார்கள்.
நடிகர்கள் முரளி, விவேக், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் மறைந்தபோது ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். தங்களது குடும்பதில் ஒருவர் இறந்ததாகவே இவர்கள் அவர்களின் இறப்பை கருதினர்.
நேற்று நடைபெற்ற நடிகர் மயில்சாமியின் இறுதி நிகழ்ச்சியில் திரைத்துறை நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். இது நடிகர் மயில்சாமி திரைத்துறையையும் தாண்டி மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு அன்பை பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!