Cinema

மாதவனை இயக்கும் தனுஷ் பட இயக்குநர்.. அவரே வெளியிட்ட தகவல்.. குஷியில் ரசிகர்கள் !

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். இவரது நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான படம்தான் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது.

குடும்பம், நட்பு, காதல் என சிம்பிள் கன்டென்டை கொண்டுள்ள இந்த படம் தமிழ்நாட்டில் திரை ரசிகர்கள் அனைவரும் வரவேற்றனர். இந்த படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கினார். இவரது முதல் படமே தனுஷ், நயன்தாரா நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம்தான். தெலுங்கு ரீமேக்கான அந்த படம் தமிழில் ஹிட் கொடுக்க, அதன்பிறகு மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைத்தார்.

அதன்படி குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கினார். சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இவர், 2016-ம் ஆண்டு வெளியான 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை இயக்கினார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து மதில் என்ற படத்தை இயக்கினார். அந்த படங்கள் எதுவும் ஹிட் கொடுக்காத இவருக்கு, மீண்டும் தனுஷ் கூட்டணி வெற்றி படமாகவே அமைந்தது.

கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் மாதவனை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கதில் அவரே வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "திருச்சிற்றம்பலத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, திறமையான மற்றும் ரசிகர்களின் விருப்பமான நடிகரான மாதவனை வைத்து இயக்கவுள்ளேன். இதனை மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மாதவன் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது, இந்தியிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டம் ஏரளமாக உள்ளது. ரசிகர்கள் இவரை சாக்லேட் பாய் என்று அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாழ்வின் இறுதி நேரத்தில் இருக்கும் சிறுவன்.. நேரில் சென்று ராம் சரண் செய்த செயல்.. குவியும் பாராட்டுகள்!