Cinema

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்.. உடற்கூறாய்வு முடிவு சொல்வது என்ன ?

பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) நேற்று திடீரென்று மணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. கலைவாணி என்பதால் தானோ என்னவோ கலையான இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

தொடர்ந்து இசை கற்று வந்த இவர், 1971-ல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா என 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு பக்கம் திரையுலகில் இருந்தாலும், தனியாக ஆல்பம், பக்தி பாடல்கள் உள்ளிட்டவையையும் பாடி வந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு ஒன்றிய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் தான் ஆகிறது, அதற்குள்ளும் இவரது பிரிவு திரையுலகில் நீங்கா துயரம் அடைந்துள்ளது.

வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று திடீரென்று தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து அவர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் மலர்க்கொடி கூறும்போது, "நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை, எனது கணவருக்கு தொடர்பு கொண்டு இவருக்கு அழைப்பு விடுத்தபோதும், அந்த அழைப்பையும் அவர் எடுக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தலையில் அடிபட்டு அவரது பெட்ரூமில் கீழே விழுந்து கிடந்தார்" என்றார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று தங்கள் விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து அவரது உடலை உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது இல்லத்தில் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதோடு அவரது வீட்டின் அருகே யாரேனும் வந்து சென்றனரா என்று சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அவரது உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு தலையில் அடிபட்டதாலே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் மரணம் குறித்த உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கை தகவல் படி, அவர் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வாணி ஜெயராமின் படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிபட்டதில்தான் அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேசையின் விளிம்பில் உள்ள இரத்த கறைகளை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும் தடயவியல் துறை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், நடிகைகள், திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read: “என் கல்லூரி நண்பர் மறைவு வேதனை அளிக்கிறது..” - டிபி கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !