Cinema

"ஆளப்போறான் தமிழன்" பாடல் பாடகர் மீது BOTTLE வீச்சு - இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை பாடியதால் ஆத்திரம்

பிரபல இந்தி பாடகர் தான் கைலாஷ் கெர். இவர் முதல் முறையாக 2003-ல் மலையாள திரைப்படத்தில் பாடல் பாடி திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் விக்ரம் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான 'மஜா' படத்தில் இடம்பெற்ற "போதும்டா சாமி" பாடலை பாடினார்.

தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் "வெயிலோடு விளையாடி", "ஆழப்போறான் தமிழன்.." என சில ஹிட் கொடுத்த பாடல்களையும் பாடியுள்ளார். தொடர்ந்து தற்போது இந்தி, கன்னட மொழிகளில் பாடல்களை பாடி வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற இடத்தில் தற்போது ஹம்பி உச்சவம் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் நேற்று இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாடகர் கைலாஷ் கேர் கலந்துகொண்டு பாடினார்.

அப்போது கன்னட பாடல்களுக்கு பதிலாக அவர் தொடர்ந்து இந்தி பாடல்களையே பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் கொண்ட பிரதீப் (22), சுறா (21) ஆகியோர் தாங்கள் கையில் வைத்திருந்த பாதி தண்ணீர் நிரம்பியிருந்த பாட்டிலை பாடகர் மீது வீசியுள்ளனர். இதனால் கச்சேரி சற்று சலசலப்பாக மாறியது.

தொடர்ந்து பாடகர் மீது பாட்டிலை வீசிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து பாடகர் கைலாஷ் ,காயங்கள் எதுவுமின்றி தப்பினார். மேலும் தனது இசை நிகழ்ச்சியையும் தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று சலசப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, நேபாளி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !