Cinema

சிம்புவுக்கு பதில் பிரதீப் ரங்கநாதன்..? அதுவும் இந்த படத்திலா? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி !

2011-ல் ஜீவா நடிப்பில் வெளியான 'ரெளத்திரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் கோகுல். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கினார். அந்த படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி இயக்குநர் கோகுலுக்கும் நல்ல பெயரை கொடுத்தது.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் வரும் டயலாக்குகள் மக்கள் மனதில் பெரிய அளவில் பதிந்தது. குறிப்பாக 'குமுதா ஹாப்பி அண்ணாச்சி', 'coffee வித் கும்ஸ்', 'பிரண்டு பீல் ஆயிட்டாப்ல.. ஆப் சாப்பிட்டா கூல் ஆயுடுவாப்ல..' போன்ற வசனங்கள் ரசிகர்கள் டிக் டாக், ரீல்ஸ் போன்றவற்றை செய்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து கார்த்தியை வைத்து 'காஷ்மோரா' படத்தை இயக்கினார். இதுவும் ஹிட் கொடுத்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'ஜூங்கா' படத்தை இயக்கினார். பின்னர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனை வைத்து 'அன்பிற்கினியாள்' படத்தை இயக்கினார்.

இதனிடையே மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'கொரோனா குமார்' என்ற படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சந்தானம் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் கால் ஷீட் பிரச்னை காரணமாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து அடுத்து வெளியான அப்டேட் படி, இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களும் வெளியானது.

அதோடு இந்த படத்திற்காக சிம்பு கடந்த ஆண்டு 'CSK சிங்கங்களா' என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதையடுத்து இந்த படம் எப்போது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. சுமார் 2 ஆண்டுகளை கடந்தும் இந்த படம் இன்னும் தொடங்க படாமல் உள்ளது.

ஆனால் இதனிடையே சிம்பு ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று படங்கள் நடித்து வெளியாகி, தற்போது 'பத்து தல' படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதில் லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு தான் மற்ற இயக்குநர்கள் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக அவரே பேட்டியில் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த தகவல்கள் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Also Read: உணவு டெலிவரி செய்வது போல பழக்கம்.. பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. கேரளாவில் அதிர்ச்சி !