Cinema

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த இளம் உதவி இயக்குநர் உயிரிழப்பு.. சாந்தனு வெளியிட்ட பதிவால் பரபர !

திரைத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று பலரும் கனவுகளோடு இருப்பர். நடிப்போ, இயக்கமோ அதற்கான முதல் முயற்சியாக படித்து முடித்த கையோடு வீட்டில் சண்டை போட்டு விட்டுனாலும் சென்னைக்கு வருவர். வந்தாரை வாழவைக்கும் இந்த சென்னை, அவர்களுக்கு பெரிய சோதனை களமாக காணப்படும்.

கோப்பு படம்

இருப்பினும் ஏதேனும் செய்யவேண்டும் என்று ஆர்வத்துடன் பாதி சாப்பிட்டும், சாப்பிடாமலும்; தூங்கியும் தூங்காமலும் இரவும் பகலும் உழைப்பர். ஏதாவது இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்வர். அவ்வாறு சேரும் அவர்களுக்கு பெரிதளவு ஊதியம் இல்லை என்றாலும், 3 வேலையும் சாப்பாடு கிடைத்துவிடும். இதனால் நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் கடுமையாக உழைப்பர்.

இவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்கள் இருக்கும். இருந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் வெளியே செய்துகொண்டே இருப்பர். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் கூட அதையே திரும்ப திரும்ப செய்வர்.

இந்த நிலையில் இப்படி மன அழுத்தத்திற்கு உள்ளான ராமகிருஷ்ணன் (26) என்ற இளம் உதவி இயக்குநர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர்.

ஆனால் கடவுள் அவரை அழைத்துக்கொண்டார். பணி செய்துகொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்தபோது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது.

தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும்வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்தும் வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான்.

நீங்கள் யாரிடமாவது பேசுங்கள், அந்த வலியையும் மன அழுத்தத்தையும் தனியாகச் இருந்து விடாதீர்கள்... அது உங்களைத் தின்றுவிடும்... “என்ன சார் இருக்கு இந்த உலகத்லே…அவ்ளோ எதிர்மறை, வெறுப்பு.. சந்தோஷமா இருங்க.. அன்பைப் பரப்புங்க, அதுக்கு ஒண்ணும் செலவில்லை”...-அதுதான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வார்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவை அடுத்து மறைந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணாவுக்கு பலரும் இணையதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்து கொண்டிருக்கும் போதே இளம் உதவி இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.