Cinema

'விக்ரம் வேதா', 'மாரி' படத்தின் குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.ராமதாஸ் சினிமா மீது கொண்ட காதலால் பட வாய்ப்புகளைத் தேடி சென்னை வந்துள்ளார். எழுத்தாளராகத் தனது சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்த இவர் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' எனும் முதல் படத்தை இயக்கினார்.

பின்னர் 'ராஜா ராஜா தான்', 'வாழ்க ஜனநாயகம்','சுயம்வரம்', 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு', 'இராவணன்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அதோடு ஏராளமான படங்களுக்குக் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இயக்குநராக மட்டும் இல்லாமல் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்', 'யுத்தம் செய்', 'மாரி',விக்ரம் வேதா, 'காக்கி சட்டை','விசாரணை' உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநராக எல்லோருக்கும் தெரிந்ததை விட நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்குத் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. பிறகு அவரை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு மாரடைப்பு காரணமாக ஈ.ராமதாஸ் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கே.கே நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஈ.ராமதாஸின் உடல் காலை 11 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள், ரசிகர்கள் நடிகர் ஈ.ராமதாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி அளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Also Read: “நீ Exam-க்கு படி..” - தன்னை விட்டுவிட்டு படத்திற்கு குடும்பம்.. விரக்தியில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!