Cinema

பொன்னியின் செல்வன்: “கார்த்தி கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு ?”-மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவாக்கத்தில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு தற்போது மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு விஷயங்களை செய்து வந்தனர்.

அதில் இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்களுக்கு சென்றது மட்டுமின்றி, ட்விட்டர் பக்கத்தில் தங்கள் பெயரை கதாபாத்திர பெயராக மாற்றி புது விதமாக ப்ரோமோஷன் செய்தனர். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடை போட்டது. இந்த படத்திற்கு பிறகு சில படங்கள் வெளியான போதிலும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த படம் திரையிடப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தின் வசூலே ரூ.500 கோடியை தண்டு வசூல் சாதனை செய்து மாபெரும் வெற்றியை பெற்றது. அதுவும் 50 நாட்களில் 500 கோடியை தாண்டி வசூல் செய்து கடந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் மட்டுமல்ல இந்திய படங்களிலே வெற்றிப்படமாக 'பொன்னியின் செல்வன்' திகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பொன்னியில் செல்வன் கதையை வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மணிரத்னம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம், வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை, இயக்குநர் மணிரத்னம் அவமதித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒன்றிய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read: “ஹாலிவுட்டில் படம் பண்ண ஆசையிருந்தால் வாங்க..”-ராஜமெளலியை அழைத்த அவதார் இயக்குநர்.. பூரிப்பில் ரசிகர்கள்!