Cinema

பிச்சைக்காரன் 2: விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார்?-DIRECTOR சுசீந்திரன் அளித்த விளக்கம்!

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதற்கான மோஷன் போஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக விஜய் ஆண்டனி படுகாயமடைந்துள்ளார்.

இதனால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள மலேசியா, கோலாலம்பூருரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அவரது வாயில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் பேச முடியவில்லை என்றும், மூச்சு விடவே சிரம படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில அவரு வீட்டுக்கு வந்துட்டாரு. இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லிருக்காங்க.

கூடிய சீக்கிரம் ரசிகர்கள்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவரை பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியை வைத்து ‘வள்ளி மயில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!