Cinema

“எதோ ஒரு காரணத்துக்காக தான் நா இன்னும் சாகல..” - மிரட்டலாக வெளியான சுந்தர் சியின் தலைநகரம் 2 டீசர் !

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி, ஜோதிர்மயி, வடிவேலு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் 'தலைநகரம்'. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இந்த படம் காமெடிக்காக மிகப்பெரிய பெயர் பெற்றுள்ளது.

குறிப்பாக இதில் வரும் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பெயர் தெரிகிறதோ என்னவோ, நாய் சேகர் என்று சொன்னால் அனைவரும் எளிதில் இந்த படத்தை அறிந்துகொள்வர். அதோடு வடிவேலுவின் "நா ஜெயிலுக்கு போறேன்.. நானு ரெளடி தான்.." உள்ளிட்ட வசனங்கள், "இலவு காத்த கிளி கதை" என பலவற்றை இந்த படத்திற்கு சிறந்த அடையாளமாக கூறலாம்.

இந்த படத்தில் சுந்தர் சி 'ரைட்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு கேங்ஸ்டெராக நடித்திருப்பார். இறுதியில் தனது நண்பராலே போலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டு அந்த படத்தில் இறந்துபோவார். படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், பல ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் கதாபாத்திரம் மூலம், அந்த பெயரை படத்தின் பெயராக வைத்து சதீஷ் நடிப்பில் வெளியானது.

மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் வடிவேலு நடிப்பில் அண்மையில் திரைப்படம் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில், தலைநகரம் படத்தின் 2-ம் பாகமும் எடுக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 மெழுகுவர்த்திகள்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய VZ துரை தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. முதல் பாகத்தில் இறந்த ரைட், இரண்டாம் பாகத்தில் எப்படி வந்திருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளது.

விரைவில் தியேட்டரில் வெளியாகும் இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரம் படத்தை டி.இமான் இசையமைத்திருந்த நிலையில், தலைநகரம் 2-ல் துணிவு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுரண்டல் அரசியல் களத்தை கொண்டிருக்கும் அவதார்.. இரண்டாம் பாகம் எதை சார்ந்திருக்கும்? - ஒரு பார்வை !