Cinema

“திரைக்கதையாகவும் சுவாரஸ்யம் இல்லை.. காட்சிகளும் ஈர்க்கவில்லை” : ‘ரத்தசாட்சி’ திரைப்பட விமர்சனம்!

நக்சல்பாரி கதை என்ற முலாமுடன் வெளிவந்திருக்கும் படம், ரத்தசாட்சி!

எது சரி எது தவறு என சொல்லும் காலத்தில் நாம் இல்லை. குறிப்பாக ஒரு போக்கு சரியா தவறா என்று பேசுவதைக் காட்டிலும் அந்தப் போக்கு ஏன் அவசியப்பட்டது என்பதை ஆராய்வதே பொறுப்புள்ள கலைக்கான அடையாளம்.

ஆயுதம், பிரசாரம், தேர்தல், களம் நாடாளுமன்றம் எனப் பல போக்குகள் இடதுசாரியத்தில் உலகம் முழுக்க உண்டு. சுவாரஸ்யமாக எல்லா போக்குகளும் வெற்றி பெற்ற வரலாறுகள் தனித்தனியே உண்டு. இன்றுமே தொடரச் செய்கிறது. இவை எதையும் பேசவில்லை ரத்தசாட்சி

ரத்தசாட்சி படம் பேசுமளவுக்கு 'ஒர்த்'தா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை. 'அறுவடையைக் கைப்பற்றுவோம்' என விளைச்சலை மக்களுக்கு நக்சல்பாரிகள் பகிர்ந்து கொடுத்த வரலாறு இருக்க, இதில் வரும் நக்சல்பாரி வயலை எரிக்கிறார். உடன் இருந்த தோழரை போலீஸ் கொன்றதற்கு பழிவாங்கும் உணர்ச்சியில் போலீஸை கொல்கிறார்.

உணர்ச்சிவசப்படாமல் அறிவுவசப்படுவதே இடதுசாரியம். அதிலும் அப்பு போன்ற தோழரை குறிப்பதாக சொல்லி எடுக்கப்படும் படத்தில் அவர் பெயர் கொண்ட பாத்திரம் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் கொலை புரிவதாக காட்டுவதெல்லாம் பேரபத்தம். நக்சலைட் இயக்கம் 'அழித்தொழிப்பு' முறையை கையிலெடுத்த காரணம் பழியுணர்ச்சி மற்றும் கோபம் என சுருக்கி காண்பிக்க முயலும் திருட்டுத்தனத்தின் விளைவு அது.

ஒரு பக்கத்தில் ஒரு 'நல்ல காவலர்' இருக்கிறார். வார்த்தை விரயம்தான்! இந்த அமைப்பு கொண்டிருக்கும் குரூரம் ஒருவனை நக்சலைட்டாகவே மாற்றும் எனப் பேசும் கதாபாத்திரம் அது. மறுபக்கத்தில் 'ஆயுதம் தூக்கி காட்டுக்குள்ள இருக்கறது தப்பான வழி' எனப் பேசுகிற நக்சலைட்!

நக்சல்களை விட்டு நக்சலைட் வெளியேறுகிறார். அவரை போலீஸ் கொன்ற பிறகு காக்கிச்சட்டையை தீயில் போட்டுவிட்டு காவலர் வேலையிலிருந்து இவர் விலகுகிறார். அதுவரை அந்த நக்சலைட்டை தேடும் படலத்தில் இருந்த அந்தக் காவலர், நக்சலைட் கிடைத்ததும் கூடிக் கும்மியாட்டம் ஆடுவார்கள் என நினைத்திருந்தார் போலும். நல்லவேளை நடுவே எங்கும் அந்த நக்சலைட்டும் இந்தக் காவலரும் 'பம்பாய்' பட இறுதி போல கைகோர்த்து 'மனதோடு மனதிங்கு மகிழ்ந்தாடும்போது' என ஆடவில்லை.

ஜெயமோகனுக்கு ஒரு தேவை உண்டு. அது சார்ந்த நோக்கமும் உண்டு. அவருடைய கலை நடவடிக்கை என்பது அரசவாதம். Conformity என சொல்லலாம். இருக்கும் அமைப்பையும் அரசையும் மதபீடங்களையும் கேள்வி கேட்காமல் தொடர்வதை உறுதிபடுத்துவதற்கான இலக்கியம் படைப்பதே அவரின் வேலை, நோக்கம், விருப்பம், இடப்பட்ட கட்டளை!

இருக்கும் அமைப்பை மாற்றப் போராடும் இடதுசாரி அவருக்கு உவப்பில்லாதவனாகவே இருப்பான். எனவே அவனை discredit செய்வதும் அவனது போராட்டத்தையும் சித்தாந்தத்தையும் திரித்து அவதூறாக்குவதும்தான் அவரின் கலைப்பணியின் ஆன்மா என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ரபீக் இஸ்மாயிலுக்கு ஏன் இந்த அவசியம் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை.

திரைக்கதையாகவும் சுவாரஸ்யம் இல்லை. காட்சிகளும் ஈர்க்கவில்லை. இடதுசாரிகளை திட்டும் சினிமாக்களாக இருந்து சினிமாக்கலைக்கேனும் நியாயம் செய்யும் பல படங்கள் உண்டு. இப்படம் அதிலும் ஜெயிக்கவில்லை. இதே நேரத்தில் இன்னொரு படம் வெளியாகி இருக்கிறது. விட்னஸ்! படம் கொண்டிருக்கும் இடதுசாரிய பார்வைக்காக கூட வேண்டாம்; கலையாக அப்படம் நிகழ்த்தும் அற்புதத்துக்கேனும் இப்படத்தின் இயக்குநர் அப்படத்தைப் பார்க்க வேண்டும்.

மற்றபடி ரத்தசாட்சி, மக்களிடம் நேரும் இடதுசாரிய சாய்மானத்தை காயடிக்க அரசகவி கொண்டு எழுதப்பட்ட அரசதுதி மட்டுமே!

Also Read: ’ரஜினி ஊரில் இல்லை.. எல்லாரும் வீட்டுக்குப் போங்க’ : முகம் வாடிய ரசிகர்கள் கூட்டம் !