Cinema

கலகத் தலைவன் : “நேர்த்தியான படம்.. ஒவ்வொரு சீனாக முதல்வர் பாராட்டினார்” - இயக்குநர் மகிழ் நெகிழ்ச்சி!

கலகத் தலைவன் படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொரு சீனாக பேசி முதலமைச்சர் தன்னை பாராட்டியதாக அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

அந்த வகையில் 'தடம்' பட இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி 'கலகத் தலைவன்' படத்தில் நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரெல்லி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'கலகத் தலைவன்' திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் காட்சியளிக்கப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை நடிகர்கள் அருண் விஜய், ஆரவ், கலையரசன், மனோபாலா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.

இந்த சிறப்பு காட்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய், "கதை களமே மிக அருமையாக இருந்தது. ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள். உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் பின்னணி இசை மிக அருமையாக உள்ளது. கலகத்தலைவன் படத்தில் கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி உள்ளார்கள்" என்றார்.

பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்திலே இதுதான் பெஸ்ட் படம். கலகத்தலைவன் படம் பார்த்து மிரண்டு போய் வந்துள்ளேன். வில்லன் கதாபாத்திரத்தில் ஆரவ் சிறப்பாக நடித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, கண்டிப்பாக திரைப்படம் மக்களுக்கு பிடிக்கும்" என்றார்.

இந்த படம் குறித்து படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி கூறுகையில், "இந்த படம் கார்ப்பரேட்களுக்கு எதிரான கதையல்ல; கார்ப்பரேட் அத்துமீறல்களுக்கான கதை. இந்த கதை, கார்ப்பரேட்களுக்கு கடிவாளம் போடக்கூடிய படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டினார். தொலைபேசியில் அழைத்து, ஒவ்வொரு சீனாக பாராட்டு தெரிவித்தார். அவர் கதைக்குள் போய் பாராட்டுவார் என நான் நினைக்கவில்லை. திரைப்படத்தில் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை வைத்துள்ளேன். சென்சாரில் சில சீன்கள் தான் கட் செய்தார்கள், மற்றபடி நான் சொல்ல நினைத்ததை திரைப்படத்தில் கூறியிருக்கிறேன்" என்றார்.

Also Read: “மரக்கன்றுகள், அறுசுவை சாப்பாடு, இனிப்புகள், பட்டாசு..” - வெளியானது ‘கலகத் தலைவன்’ : ரசிகர்கள் ஆரவாரம் !