Cinema

திருமணம் செய்வதாகக் கூறி நடிகை பூர்ணாவை கடத்த முயன்ற வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு என்ன ?

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தவர் நடிகை பூர்ணா. பரத், வடிவேலு நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு, கந்தக்கோட்டை, ஆடுபுலி ஆட்டம், வேலூர் மாவட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதோடு சசிகுமார் நடிப்பில் சகோதரர் பாசத்தை மையமாக கொண்டு வெளியான 'கொடிவீரன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மேலும் திரை ரசிகர்களை கவர்ந்தார்.

ஷாம்னா கசீம் என்ற பெயர் கொண்ட இவர், திரைக்காக பூர்ணா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம், தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் நடித்து, அந்த பகுதியல் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பையும் பெற்றார். தற்போது தமிழில், படம் பேசும், அம்மாயி, பிசாசு 2 போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நடிகை பூர்ணாவிடம் கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த ஒரு கும்பல் திருமணம் குறித்து அணுகியுள்ளது. அப்போது மணமகனாக ரபீக் என்பவரது புகைப்படத்தை காட்டி பேசி பூர்ணாவின் குடும்பத்துடன் நண்பர்களாக பழகி வந்தது. பின்னர் நாளடைவில் அவர்கள் நடவடிக்கைள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் குறித்து பூர்ணா குடும்பத்தினர் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் மிரட்டல் கும்பல் என தெரியவந்தது. மேலும் பூர்ணா குடும்பத்திடம் லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியும் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களை தங்க கடத்தலுக்கு பயன்படுத்த எண்ணிய அந்த கும்பல் பூர்ணாவை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சியும் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து பூர்ணாவின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது.

அப்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஏற்கனவே இது போன்று நடிகைகள் மாடலிங் பெண்களை ஏமாற்றி பணம் நகைகளை பறித்துள்ளது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்களில் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது அனைத்து குற்றவாளிகளையும் வரும் டிச. 12-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவரும், பூர்ணாவும் பல ஆண்டுகளாக நட்பாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ‘நடிகர் கிருஷ்ணா’ காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!