Cinema

விஜய், ரஜினி பட பிரபல கலை இயக்குநர் சந்தானம் திடீர் மறைவு.. திரையுலகினர் சோகம் !

பிரபல கலை இயக்குநரான சந்தானம் நேற்று மாரடைப்பு காரணமாக காலமடைந்துள்ள நிகழ்வு திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கலை இயக்குநர்கள். இதில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சந்தானம். 2010-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் மூலம் கலை இயக்குநராக பிரபலமானவர் சந்தானம்.

அதன்பிறகு ஏ.எல் விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்திலும் கலை இயக்குநராக பணிபுரிந்திருந்தார். தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று படத்திற்கும் கலை இயக்குநராக பணிபுரிந்தார்.

பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'சர்க்கார்'. இந்த படத்தில் சந்தானம் கலை இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் மீண்டும் பணியாற்றினார்.

மேலும், மகான், ஜகமே தந்திரம், சர்கார் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார்.

இந்த நிலையில் மாரடைப்பால் சந்தானம் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “கணவரும், வளர்ப்பு மகனும்.. என்னை கருணைக்கொலை செய்யுங்கள்” : குடியரசுத் தலைவருக்கு பெண் உருக்கமான கடிதம்!