Cinema

பிரபலமான 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை கடிதம் எழுதி வைத்து தற்கொலை.. சின்னத்திரை ரசிகர்கள் சோகம் !

இந்தி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் வைஷாலி தக்கார். கடந்த 2011-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட 'சாசுரால் சிமார் கா' என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் வெளியானது.

இந்தி சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்ற இது, தமிழிலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் வைஷாலி தக்கார். முன்னதாக 3 சீரியலில் நடித்த இவர், 'சாசுரால் சிமார் கா'-வில் ஒரு ஆண்டு நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சில இந்தி தொடரில் நடித்து வரும் இவர், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், வைஷாலி உடலை தூக்கில் இருந்து இறக்கினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் சில காலம் வரை தான் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது முன்னாள் காதலனால் தான் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், தனக்கு வரப்போகும் கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் அபிநந்தனை தான் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது முன்னாள் காதலனால் தான் துன்புறுத்தலை அனுபவிப்பதால் தற்கொலை செய்வதாக குறிப்பு எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒடிசாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒரு HONEY TRAP.. இளம்பெண்ணின் அந்தரங்க வலையில் சிக்கிய 71 வயது முதியவர் !