Cinema

’நடிகை தீபா தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது.. என்ன நடந்ததுனே தெரியல': கண்கலங்கும் 'வாய்தா' பட இயக்குநர்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா என்கிற தீபா. இவர் தமிழில் 'வாய்தா', படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இவர் சென்னை நெற்குன்றம் அன்னம்மாள் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த நிலையில் நேற்று ஜெசிகா தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இவரது தற்கொலை குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜெசிகா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், "நான் ஒருவரைக் காதலித்து வந்தேன் ஆனால் அவர் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை" என எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெசிகாவின் தற்கொலை அதிர்ச்சியாக இருப்பதாக வாய்தா படத்தின் இயக்குநர் மகிவர்மன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகிவர்மன்," ஜெசிகா ரொம்ப தைரியமான பொண்ணு. வாய்தா படத்தின் படப்பிடிப்பின்போது கூட அவர் தனியாகத்தான் வந்து சென்றார்.

அனைவரிடமும் தைரியமாகப் பேசக்கூடியவர். தனது பிரச்சனையை எங்கள் படக்குழுவில் யாரிடமாவது கூறியிருந்தால் அவருக்கு அது உதவியாக இருந்திருக்கும். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஜெசிகாவின் தற்கொலை அதிர்ச்சித்தரக்கூடியதாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஹரியானா : தொடர் பாலியல் வன்கொடுமை.. குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை !