Cinema

ரஜினிக்கு தம்பியாக நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார்.. திரையுலகில் அதிர்ச்சி!

ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த குணச்சித்ர நடிகர் சக்கரவர்த்தி (62) மும்பையில் காலமானார்.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நடிகை வடிவுக்கரசியின் அண்ணனாக சிறு வேடத்தில் நடித்தார் சக்கரவர்த்தி. தொடர்ந்து ரஜினியின் ‛ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் தம்பியாக நடித்தார். ‛ரிஷி மூலம்' படத்தில் சிவாஜியுடன் உடன் இணைந்து நடித்து தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

முள்ளில்லாத ரோஜா' படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து அசத்தினார். தொடர்ந்து, ‛தர்ம யுத்தம்', ‛தூக்கு மேடை', 'கொட்டு முரசே', ‛உதயகீதம்', ‛புதிய பயணம்', ‛இதயம் தேடும் உதயம்', ‛முள்ளில்லாத ரோஜா', ‛ராஜாதி ராஜா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கிட்டத்தட்ட 100 படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பல்வேறு விதமான குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பின்னர், சினிமாவிலிருந்து விலகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார் சக்கரவர்த்தி. இந்நிலையில், இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது.மூத்த நடிகர் சக்கரவர்த்தி மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.