Cinema

’எத்தனை கோடி கொடுத்தாலும் ரசிகர்களை கெடுக்கும் இதில் நடிக்க முடியாது’ : கதவை மூடிய அல்லு அர்ஜூன்..!

தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அல்லு அர்ஜூன் 6 கோடி ரூபாய் வருமானம் வரக்கூடிய விளம்பரத்தில் நடிக்க முடியாது எனக் கூறி மறுத்திருக்கும் செய்திதான் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

புஷ்பா படத்தை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த நிலையில், சிகெரெட், பான் மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜூனை அனுகியிருக்கிறார்கள்.

அதில் நடிப்பதற்காக 6 கோடி ரூபாய் வரையில் சம்பளமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் தவறான பாதையில் இட்டுச்செல்ல விரும்பவில்லை எனக் கூறி எந்த ஆலோசனைக்கும் உட்படாமல் உடனடியாக அதில் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறாராம் அல்லு அர்ஜூன்.

சினிமாவில் திரைக்கதைக்காக புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அல்லு அர்ஜூன் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்கப்பட்டும் வருகிறது. முன்னதாக ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுப்பதாக கூறியும் நடிகை சாய்பல்லவி அதில் நடிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் திரைத்துறை உள்ளிட்ட பிற பிரபலங்கள் இருப்பதால் சமூக அக்கறையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் வீராட்டும், நடிகை தமன்னாவும் நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: KGF படம் கம்யூனிசம் பேசுகிறதா? படம் கொண்டிருக்கும் குறியீடுகள் சொல்லும் சேதிகள்?