Cinema

”100% ரசிகர்களை அனுமதித்தால் RRR படம் ரிலீஸாகும்” - 2 வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

பாகுபலி படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது RRR.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி திரையுலக நடிகர்களும் சங்கமிக்கும் படமாக உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர்.

ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்த படம் ஜனவரி 7ம் தேதி ரிலீசாக இருந்தது.

அதற்காக புரோமோஷன் பணிகளிலும் படக்குழு மும்முரமாக ஈடுபட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக காரணமாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் RRR பட ரிலீஸ் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேலானோர் தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளானாலும் பாதிப்பு குறைவாக இருப்பதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் சூழல் உருவாகி வருகிறது.

இதன் காரணமாக ஆர்.ஆர்.ஆர். படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, கொரோனா நிலைமை சீராகி திரையரங்குகளில் 100 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் மார்ச் 18ம் தேதி படம் ரிலீஸாகும். இல்லையேல் ஏப்ரல் 28ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.