Cinema

25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் கம்பேக் கொடுத்த அரவிந்த் சாமி; வெளியானது டீசர்!

தமிழ் சினிமாவின் சாக்லேட் ஹீரோவாக இருந்த அரவிந்த சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவருக்கு தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிட்டியது. இதன் மூலம் சாக்லேட் வில்லனாக மாறியுள்ளார்.

அதனையடுத்து போகன், செக்கச்சிவந்தது வானம் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன் போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவிலும் கம்பேக் கொடுக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. அதன்படி ஃபெல்லினி இயக்கத்தில் ‘ஒட்டு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் அரவிந்த் சாமி.

குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. தமிழில் ரெண்டகம் என பெயரிடப்பட்டுள்ள படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1996ம் ஆண்டு தேவராகம் என்ற மலையாளப் படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். அதற்கு பிறகு இப்போதுதான் நேரடியாக மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.