Cinema

“கிண்டல் பண்றாங்களா? ஏன் அழுதீங்க?” : ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்!

மலையாள நடிகர் மோகன்லால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இதுவரை 340க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் மோகன்லால். இதன்காரணமாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி அம்மாள். இவர் தீவிர மோகன்லால் ரசிகை.

சமீபத்தில், மோகன்லால் பெயரை வைத்துத் தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் இவர் பேசி அழும் வீடியோ பலராலும் பகிரப்பட்டது.

இந்நிலையில்தான் ருக்மிணி அம்மாளை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் மோகன்லால். ருக்மிணி அம்மாளை நலம் விசாரித்த மோகன்லால், அவரது வயது என்ன, ஏன் வீடியோவில் அழுதீர்கள் எனக் கேட்டார்.

ருக்மிணி அம்மாள் மோகன்லாலைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, தான் கண்டிப்பாக நேரில் வந்து சந்திப்பேன் என்று மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகையிடம் பேசிய மோகன்லாலை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: நடுவழியில் நின்ற ரயில்.. கைகளால் தள்ளிச் சென்ற தொழிலாளர்கள் : ம.பி-யில் நடந்த அவலம் - வைரல் வீடியோ!