Cinema

" 'கைதி' படத்தின் கதை என்னுடையது" - வழக்கு தொடுத்த கேரள இளைஞர்: விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!

கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கைதி’. இந்த படத்தின் கதை தன்னுடையது என கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஆர். பிரபுவை நேரில் சந்தித்து இந்த கதையை கூறியதாகவும் அந்த கதை பிடித்து போனவர் தனக்கு 10 ஆயிரம் முன்பணமாக கொடுத்து படத்தின் முழு கதையும் முடிக்க சொன்னதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் எஸ்.ஆர். பிரபுவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் கைதி படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும் ‘கைதி 2’ படத்தை உருவாக்கவும் தடைவிதித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் அவர் “எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர்.

எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”. என கூறியுள்ளார்.

Also Read: ’சூர்யா40’ படத்திற்காக 50 நாட்கள் ஒரே இடத்தில் ஷூட்டிங்... Sony LIVல் சிவகார்த்திகேயன் படம்! #CineUpdates