Cinema

டிஜிட்டலில் களமிறங்கவிருக்கும் எஸ்.ஜே.சூர்யா... 'KGF 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி... #CineUpdates

டிஜிட்டலில் களமிறங்கவிருக்கும் எஸ்.ஜே.சூர்யா!

குஷி, வாலி என பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக இருந்து வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் இவர் கைவசம் தற்போது ராதா மோகனின் ‘பொம்மை’ வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஆகிய படங்கள் உள்ளன.

இதில் பொம்மை படத்தின் ட்ரெய்லர் ஜூலையில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா டிஜிட்டல் தளத்திலும் களமிறங்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவிருக்கும் க்ரைம் த்ரில்லர் கதையில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் இதற்கான படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் முதல் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது!

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எஃப்’. யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மற்ற இந்திய மொழி ரசிகர்களும் நல்ல வரவேற்பு அளித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது, இதில் மெயின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வரும் ஜூலை 16ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரிலீஸை தொடர்ந்து படத்தை டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மூன்று நாயகிகளுடன் தொடங்கிய அசோக் செல்வன் படம்!

‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளாக தேர்வு செய்து ஒப்பந்தமாகிவரும் அவர் அடுத்து கார்த்திக் என்பரின் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதில் அசோக் செல்வன் ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக படக்குழு ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது விரைவில் நாயகிகளும் இதில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ‘விக்ரம்’ படத்தில் இணைவதில் தாமதம் ஏன்? - விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்பால் அதிர்ந்த கமல்!