Cinema

ப்ளூ சட்டை மாறனின் படத்துக்கு 38 கட்... மறு தணிக்கை குழு பரிந்துரை... ஏற்றுக்கொள்ளுமா படக்குழு?

பிரபல யூட்யூப் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய அதிரடி விமர்சனங்களால் பிரபலமானவர். இவர் கடந்த 2019ல் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆன்டி இந்தியன் என டைட்டில் வைக்கப்பட்ட அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாவற்றையும் அவரே செய்து முடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நரேன், ராதாரவி ஆகியோரோடு நிறைய புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள். ஆதம்பாவா தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் ஆன்டி இந்தியன் படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்து சென்சார் போர்டு படத்துக்கு தடை விதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு மறு தணிக்கை குழு முன்பு படத்தை ஸ்கிரீன் செய்ய முடிவு செய்தது. கன்னட சினிமா இயக்குநரான நாகபாரன உட்பட்ட 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு சமீபத்தில் பெங்களூரில் படத்தைப் பார்த்தார்களாம். அவர்கள் அனைவருமே படத்துக்குப் பாராட்டு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இருந்தாலும், படக்குழு எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய சில சீன்களை கட் செய்யச் சொல்லி மறு தணிக்கை குழு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படக்குழு மறு தணிக்கை குழுவின் 38 பரிந்துரைகளை மாற்ற சம்மதித்தால், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கத் தயாராக இருப்பதாக ரிவைஸிங் கமிட்டி தெரிவித்திருக்கிறது. ஆனால், அது வேண்டாம் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்கிறோம் என முடிவெடுத்திருக்கிறது படக்குழு.