Cinema

“கதை இருக்கு... ரஜினியின் அழைப்புக்கு காத்திருக்கேன்” - ரசிகர்கள் கேள்விக்கு 'ப்ரேமம்' இயக்குநர் பதில்!

‘நேரம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியான இந்தப் படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்திருந்தனர். நேற்று இந்தப் படம் வெளிவந்து 8 வருடங்கள் நிறைவடைந்தது கொண்டாடப்பட்டது. பலரும் இந்தப் படம் பற்றி எழுதினார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய `ப்ரேமம்' படம் மொழி எல்லைகள் கடந்து பலராலும் ரசிக்கப்பட்டது.

அதன் பிறகு பெரிய இடைவெளிக்குப் பின் தனது அடுத்த படமாக `பாட்டு' என்ற படத்தை அறிவித்திருக்கிறார். இதில் ஃபகத் பாசிலும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். இந்த சூழலில் ரசிகர்களில் கேள்விகளுக்கு, பதில் அளித்த அல்போன்ஸூக்கு ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்பட்டது. அது என்ன கேள்வி என்றால், "நீங்க ரஜினி சார் வெச்சு ஒரு படம் பண்ணா நல்லாருக்கும்ன்றது என்னோட ரொம்ப நாள் ஆசை. ரஜினி சாருக்கு நீங்க கதை வெச்சிருக்கீங்களா?" என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் "ரஜினி சார்க்கு கதை வெச்சிருக்கேன். ஆனா, ப்ரேமம் முடிஞ்சு நிறைய முறை மீட் பண்றதுக்கு ட்ரை பண்ணேன். இது வரைக்கும் மீட் பண்ண முடியல. நான் ரஜினி சாரை வெச்சு படம் பண்ணனும்னு என் தலைல எழுதியிருந்தா நடந்தே தீரும். நேரம் கரெக்ட் ஆவட்டும். நம்ம பாதி வேலை செஞ்சிட்டா, மீதி பாதி கடவுள் பாத்துப்பார்னு ஒரு நம்பிக்கை இருக்கு. கடவுள் கோவிட் அழிக்கறதுல பிஸியா இருக்கார்னு நினைக்கிறேன். அதுக்கப்பறம் திரும்ப ட்ரை பண்றேன்" என்று கூறியிருக்கிறார்.

Also Read: 'கே.ஜி.எஃப் -2' ஜூலையில் வெளியாகாது : OTT ரிலீஸுக்கு வாய்ப்பு இருக்கிறதா? - படக்குழுவின் முடிவு என்ன?