Cinema

தோழா பட இயக்குநருடன் தெலுங்கில் கால் பதிக்கும் நடிகர் விஜய்? பரபரக்கும் தகவல்கள்!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் தியேட்டரிலும் சரி, ஓடிடியிலும் சரி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்ததாக, தனது 65ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த நிலையில் விஜயின் அடுத்த படம் பற்றிய ஒரு தகவல் நேற்றிலிருந்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. விஜய் ஒரு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் என்பதுதான் அது.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் மகரிஷி, தமிழில் கார்த்தி நடித்த `தோழா' போன்ற பல படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவருடைய இயக்கத்தில் தான் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் பரவிவருகிறது. இதற்கு சில வாரங்கள் முன்பு விஜயின் மேனேஜர் ஜெகதீஸும், தெலுங்குத் தயாரிப்பாளர் தில்ராஜூவும் சந்தித்ததாக செய்திகள் பரவியது. அப்போதும் இது போன்று விஜயின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் பரபரபத்தது. இப்போது மீண்டும் வம்சி - விஜய்க்கு கதை சொல்லிவிட்டார், சொல்லப்போகிறார் போன்ற செய்திகள் சுழல்கிறது.

மேலும், தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவீஸ் நிறுவனமும் விஜய் படத்தை தயாரிக்க முயற்சி எடுப்பதாகவும், தமிழில் அவர் வாங்கும் சம்பளத்தை விட பெரிய தொகையை கொடுக்க தயாராக உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இதில் எந்த செய்தி உண்மை என விஜய் தரப்பு மட்டும்தான் உறுதிபடுத்த முடியும்.

அதுவரை இது போல பல செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும். இது உறுதிபடுத்தப்படாத தகவல் என்ற நிலையிலும், சமூக வலைதளங்களில் பலரும் விஜய் - வம்சி படம் தமிழ் - தெலுங்கில் தயாராகிறது, தில்ராஜூதான் தயாரிக்கிறார் என எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் டோலிவுட் ஹாட்ரிக் கூட்டணி; OTTல் ஐக்கியமான தமன்னா? - சினி பைட்ஸ்