Cinema

“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்!

நம் காலத்தின் மகத்தான திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை தனது இசையில் ஏராளமான பாடல்களைப் பாட வைத்துள்ள இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பி மறைவால் மிகவும் துயரடைந்து, வீடியோ ஒன்றின் வழியாக தனது துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

எஸ்.பி.பி உடல்நிலை மோசமடைந்தபோது, “பாலு சீக்கிரம் எழுந்து வா” என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா. அந்த வீடியோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி பார்த்து அகமகிழ்ந்துள்ளார்.

எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.சரண் இளையராஜா உருக்கமாகப் பேசிய வீடியோவை செல்போனில் அவருக்கு காட்ட, செல்போனை அருகில் கொண்டுவரச் செய்த எஸ்.பி.பி வீடியோவை மீண்டும் பார்த்து இளையராஜாவை முத்தமிட்டுள்ளார்.

இந்தத் தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டுக்கு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் தீபக் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இடையேயான பல்லாண்டுகால நட்பை உணர்த்தும் இந்தத் தருணம் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

Also Read: “இத நாம அனுபவிச்சுதான் ஆகனும்” - உலகுக்கு எஸ்.பி.பி. சொன்ன கடைசி மெசேஜ்!