Cinema

“எங்க போய்ட்ட பாலு? இங்க உலகம் ஒரே சூன்யமாகப் போச்சு!” - எஸ்.பி.பி மறைவு குறித்து இளையராஜா உருக்கம்!

நம் காலத்தின் மகத்தான திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார்! அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை தனது இசையில் ஏராளமான பாடல்களைப் பாட வைத்துள்ள இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பி மறைவால் மிகவும் துயரடைந்துள்ளார். தனது நெருங்கிய நண்பரை இழந்து வாடும் இளையராஜா தனது துக்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை மோசமடைந்தபோது, “பாலு சீக்கிரம் எழுந்து வா” என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா. எஸ்.பி.பி இன்று காலமான நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உருக்கமாகப் பேசியுள்ள இளையராஜா, “பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கல. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காக பாட போய்ட்டியா? இங்க உலகம் ஒரே சூன்யமாகப் போச்சு. உலகத்துல ஒன்றுமே எனக்குத் தெரியல.

பேசுறதற்குப் பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல” எனத் துயரார்ந்த குரலுடன் தெரிவித்துவிட்டு நீண்ட அமைதிக்குப் பிறகு, “எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதற்கு அளவு இல்ல” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Also Read: “காலம் பிரித்தாலும் அவரது தேன் குரல் காற்றில் தவழும்” - பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!