Cinema

“சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் காரணம் இவர்கள் சொல்வது அல்ல” - அதிர்ச்சி கிளப்பிய கங்கனா ரனாவத்!

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

34 வயதாகும் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே இப்படியொரு தவறான முடிவை தேர்ந்தெடுக்குக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்குக்கு மன அழுத்தம் ஏற்படவே பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த சிலரது தொல்லையே காரணம் என்கிற குற்றச்சாட்டு சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கங்கனா ரனாவத் பேசியுள்ளதாவது :

“சுஷாந்த் சிங்கின் மரணத்தால் நாம் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது மரணத்திற்கு சிலர் புதிய காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திடமான மனம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார்கள்.

சுஷாந்த் சிங் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர். அவர் என்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் ‘டாப்’ ரேங்க் வாங்கியவர். அவர் மனம் பலவீனமானது அல்ல.

சுஷாந்தின் கடைசி சில பதிவுகளில் அவர் தன் படங்களை பார்க்குமாறு மக்களை கெஞ்சியுள்ளார். “எனக்கு ‘காட்ஃபாதர்’ யாரும் இல்லை. என் படங்கள் ஓடவில்லை என்றால் என்னை திரை உலகிலிருந்து துரத்தி விடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் அவர்.

சுஷாந்தின் நல்ல படங்களுக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை. சுஷாந்த் சிங் பாலிவுட்டில் யாருடைய வாரிசும் இல்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டுள்ளார். அதுவே அவரது இந்த முடிவுக்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.