Cinema

''கண்களால் ஆழ்ந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்''- பத்மஸ்ரீ விருது வென்ற நடிகர் இர்ஃபான் கான் காலமானார்!

யதார்த்தமான நடிப்பின் மூலம் இந்தி திரையுலக ரசிகர்களை கவர்ந்த நடிகர் இர்ஃபான் கான், நியூரோ எண்ட்ரின் டியூமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று பெருங்குடல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இர்ஃபானின் உயிர் சிகிச்சை பலனளிக்காததால் பிரிந்தது. அவருக்கு வயது 53.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர், 1988ம் ஆண்டு சலாம் பாம்பே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பாலிவுட்டில் கலக்கியவர்.

இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இர்ஃபானின் நடிப்புத் திறமைக்கு ஹாலிவுட்டும் கதைவை திறந்தது. அதன் படி, ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை, ஜுராசிக் வேர்ல்ட் தி ஜங்கிள் புக், தி அமேசிங் ஸ்பைடர்மேன் போன்ற படங்களிலும் நடித்து, உலக அளவில் புகழ்பெற்றார்.

2011ல் இந்தியில் வெளியான பான் சிங் தோமர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற இர்ஃபான், பத்ம விருதுகளையும் வாங்க தவறவில்லை.

இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த நடிகரை இந்திய திரையுலகம் இழந்துள்ளது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த வாரம் சனிக்கிழமையன்று, ஜெய்ப்பூரில் உள்ள இர்ஃபானின் தாயார் சாயிதா பேகத்தின் (95) உயிர் வயது மூப்பு காரணமாக பிரிந்தது.

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், நேரடியாகச் சென்று இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாததால், வீடியோ கால் மூலமே கண்ணீரில் கரைந்திருக்கிறார்.

இர்ஃபான் மறைவால் வாடிய அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை பற்றிய பதிவுகளை கொண்டு நிரப்பி வருகின்றனர். ட்விட்டரில் #IrfanKhan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.